Thursday, May 26, 2011

பதிவர்கள் சந்திப்பு



Food Ulagam  திரு .  சங்கரலிங்கம் அவர்கள்,   தமிழ் பதிவர்கள் அனைவரும் நெல்லையில் சந்திக்க ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.  இது வரை, சென்னை - மதுரை -  கோவில்பட்டி - நெல்லை பகுதிகளில் யில் இருந்து சில பதிவர்கள் வர சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறினார். 

இது குறித்து அவர் அனுப்பிய விவரம்: 
அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!
 
           வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள்   சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
 
           இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
 
           நாள்: 17.06.2011 
 
           நேரம்: காலை 10.00 மணி
10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம். 
 
எனது unavuulagam@gmail.com  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
 
என் செல் எண் 9442201331.
 
ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும். 
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம் 


சந்திப்பு நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்! 
இறைவன் சித்தமானால்,  நான் நிச்சயமாக கலந்து கொள்வேன். :-) 

 பதிவுலக அன்பு  மக்களே,  நான் இரண்டு மாதங்கள் பதிவுலகுக்கு லீவு என்று சென்ற பதிவிலேயே சொல்லி இருந்தேன்.    அப்படிக்கா போக இருப்பதால், இப்படிக்கா என்னை மறந்து விடாதீர்கள். 
ஆகஸ்ட் மாதம்,   மீண்டும் சந்திக்கிறேன். 
என்றும் அன்புடன் சித்ரா :-) 



 
 

Sunday, May 22, 2011

தம்பிக்கு எந்த ஊருங்கோ?

இந்த வார இறுதியில், கோடை   விடுமுறை ஆரம்பம் ஆகிறது.   

அதற்குள் முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ....
பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. 

பதிவுகள் எழுத வந்து  ஒன்றரை வருடங்கள் ஆகி போச்சு.  ஆனால், எழுதி இருக்கும் பதிவுகள்:   இந்த பதிவோடு சேர்த்து 138 தான் ஆகுது....  அதிலேயும்  நான்கைந்து பதிவுகள்,  லீவு லெட்டர்களே பதிவுகளாய்...... ம்ம்ம்ம்.....    அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் பதிவுலக லீவு வேண்டும்ங்க ..... அநேகமாக இனி ஆகஸ்ட் மாதம் தான் சந்திப்பேன் என்று நினைக்கிறேன்.  இந்த ரேட்ல போச்சுனா, நான் 150 வது பதிவு  போடுவதற்குள்  அடுத்த வருடம் வந்து விடும் போல  ...  ஹா, ஹா, ஹா , ஹா.....

சமீபத்தில்,   இங்கே உள்ள அமெரிக்க நண்பர்கள் சிலருடன் ஒரு சந்திப்பு:    சம்மர் லீவுக்கு எங்கே எங்கே போகிறோம் என்று செய்தி பரிமாற்றம் நடந்து கொண்டு இருந்தது.  நான் முகத்தில் ஒரு பிரகாசத்துடன் :  "இந்த வருடம்,  திருநெல்வேலிக்கு போகிறேன்," என்று சொன்னேன். 

உங்களுக்கு எப்படி என்று எனக்குத் தெரியாது.   ஆனால், எனக்கு:   ஒரு ஊருக்கு போயிட்டு வருவது ஒரு வகை சந்தோசம்.  ஆனால், அந்த ஊருக்கு போய் விட்டு வந்ததை டமாரம் அடித்து சொல்வது இன்னொரு வகை சந்தோசம்.    ஹி ,ஹி , ஹி, ஹி,..... 

ஆனால், எங்க  அமெரிக்க  நண்பர் ஒருவர் அவர்  செல்லப் போகிற இடத்தை எப்படி  டமாரம் அடித்து சொல்ல போகிறார் என்று தெரியல.  எனக்கு அவர் எழுதி காண்பித்ததை நான் இன்னும் சரியாக படித்து முடிக்கவில்லை.  நீங்க முயற்சி செய்ங்க:
அமெரிக்காவில் ,  மாசசூஷட்ஸ்  (Massachusetts ) என்ற மாநிலத்தில் உள்ள ஒரு ஏரி உள்ள ஊருக்கு செல்கிறார்.   விடுமுறையில்,  பொழுது போக்குக்காக (Fishing) மீன் பிடிக்க செல்பவர்கள் அங்கே அதிகம்.  

இருங்க ஒரு நிமிஷம், மூச்சு  வாங்கிக்கிறேன்.  அந்த  ஏரியின் பெயர்:


"Lake Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg"  
அதை  சுருக்கமாக :    Lake Chaubunagungamaug
என்று சொல்வார்களாம்.  இந்த பெயரை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்.  "கட் அண்ட் பேஸ்ட் " செய்தாலே ஏழெட்டு spelling mistake வரும் போல.  எங்கே இருந்து வார்த்தை சுத்தமாக வாசித்து காட்டுறது?  ம்ஹூம்......

 http://en.wikipedia.org/wiki/Lake_Chaubunagungamaug 

அர்த்தம் என்னவென்றால்,  "Englishmen at Manchaug at the Fishing Place at the Boundary" 
எளிதாக வெளியூரு மக்கள் சிலர்,   Webster lake என்று சொல்வாங்க என்றார். 

எனக்கு என்னமோ,   "சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா ....சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா...." என்றுதான்  வாசிக்க வருது.


எங்கள் நெருங்கிய நண்பர்  சேவியர், சில வருடங்களுக்கு முன் ஐரோப்பா டூர் சென்று விட்டு வந்தார்.  அங்கே அவர் சென்ற இடங்களிலேயே எங்கள் கவனத்தை அதிகம் பெற்ற இடமும் படங்களும்:  
Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch  என்ற ஊரில் எடுக்கப்பட்டவை. 
  
"லாலாக்குடோல்டப்பிமா" வுக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். 

உலகத்திலேயே நீண்ட பெயரை கொண்ட ஊரு அதுதான் என்றார்.  அவர் காட்டிய படங்களில், ஒன்று அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகை  படம். 



நாங்கள் சொல்வதை எல்லாம், அமைதியாக கேட்டு கொண்டு இருந்த ஒரு நண்பர் - இவர் பாங்காக் (தாய்லாந்து) இல் இருந்து இங்கே மேற்படிப்புக்காக வந்தவர் - "எங்கள் ஊரான பாங்காக்கின் முழுப்பெயர் என்னவென்று தெரியுமா?  இயற்பெயர் நீளமான பெயர்.  ஆனால், பாங்காக் என்றே அதிகாரப்பூர்வமாக மாறி விட்டது " என்று  ஆங்கிலத்தில் சொன்னார். 
கூகுள் உதவியுடன் அவர் வாசித்து காட்டியது: 


"   Krung Thep Mahanakhon Amon Rattanakosin Mahinthara Yuthaya Mahadilok Phop Noppharat Ratchathani Burirom Udomratchaniwet Mahasathan Amon Phiman Awatan Sathit Sakkathattiya Witsanukam Prasit

வீட்டுக்கு வந்து விக்கிபீடியாவில் செக் செய்து விட்டேன்.  பாலி மற்றும் sanskrit கலந்து உருவாக்கப்பட்ட பெயர் என்று விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. 


அப்படியே,  நண்பர் வட்ட பேச்சு, அமெரிக்காவில் இருக்கும் வேடிக்கையான ஊர் பெயர்கள் பற்றி திரும்பியது.  ஏற்கனவே பல ஊர் பெயர்களை:  


குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். 

வித்தியாசமான ஊர் பெயர்களை நாங்கள்  ஒவ்வொருவரும்  சொல்லி - அதிகம் சிரித்தோம்: 


Tarzan -  Texas

Goose Egg -  Wyoming

Buttermilk -  Arkansas

Coffee City -  Texas

Hot Coffee -  Mississippi

Yum Yum -  Tennessee

Ordinary - Virginia

Dead Women Crossing -  Oklahoma

Sweet Lips - Tennessee

Monkey Run - Missouri

Devils Den -  California

Seven Devils -  North Carolina

Pray  -  Montana

Burnt Factory -  West Virginia

Burnt Tree -  Virginia

Mosquitoville -  Vermont

Spider  -  Kentucky

Why -  Arizona

Whynot  - Mississippi

Big Rat Lake  -  Alaska

நல்லா சிரிங்க..... சிரிச்சிக்கிட்டே இருங்க..... அதற்குள் நான் இங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.  விடுமுறைக்கு போவதற்கு முன், உங்களிடம் எல்லாம் கண்டிப்பாக சொல்லி விட்டுத் தான் போவேன். சரியா?  




 நன்றி:  கூகுளூர் (Google images)  :-)






 

Monday, May 9, 2011

பூசணிக்காய் ஆரோக்கியமும் புடலங்காய் கேசரியும்

 
 (Thanks to "Tasty Appetite Jay" for this Rava  Kesari photo through  Google Images)
 
அன்னைக்கு ரவா கேசரி, நிறைய நெய் ஊற்றி கிண்டி கொண்டு இருந்தேன். நெருங்கிய உறவினர் இந்தியாவில் இருந்து அழைத்து இருந்தார்.  
 
"என்ன பண்ணிட்டு இருக்கீங்க, சித்ரா?"
"ரவா கேசரி கிண்டிக்கிட்டு இருக்கேன்."
 "அப்படியா.... எனக்கு கேசரி ரொம்ப பிடிக்கும். முன்பு அடிக்கடி சாப்பிடுவேன். உங்க பக்குவம் சொல்லுங்க."
 
" ரவா கேசரியில் என்ன பக்குவம் வேண்டி கிடக்கு. கொஞ்சம் ரவா......"
" ரவையில் ,  ராகி - பார்லி மாதிரி அதிகம் சத்து கிடையாது தெரியுமா? ரவை நிறைய சேர்த்துப்பீங்களோ?  சரி, அப்புறம் சொல்லுங்க...."
"நெய்......"
"நான் (diet ) டயட் ல இருக்கேன். இப்போல்லாம் நெய் சேர்த்துக்கிறது இல்லை.  அதுல எவ்வளவு கொழுப்பு இருக்கிறது தெரியுமா?  அப்புறம்...."
"சீனி ....."
"சீனியா?  அதில் வெறும்  எம்ப்டி கலோரீஸ் (empty calories) தான் இருக்குது.   நான் sweetener தான் தேவைப்பட்டால் கொஞ்சம் உபயோகிப்பேன்.  சீனி சேர்த்துக்க மாட்டேன்."
 
 " அப்படியா?   அப்போ ஒண்ணு பண்ணுங்க.... டயட் (diet) ல இருக்கிறவங்களுக்கு ஏத்த மாதிரி ரவா கேசரி செய்ய  பக்குவம் சொல்றேன்.  ரவைக்கு பதிலாக, சத்து அதிகம் உள்ள  ராகி கொஞ்சம் எடுத்துக்கோங்க.  நெய் வேண்டாம்.  அதுக்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட மோர் எடுத்துக்கோங்க. சீனி வேண்டாம். ஒரு பின்ச் உப்பு போட்டு நல்லா கலக்குங்க....."
 
"சித்ரா, என்ன இது?  ரவா கேசரி பக்குவம்னு பார்த்தால்,   இது ஏதோ ராகி/கேப்பை கூழ் மாதிரி சொல்றீங்க..."
"புரிஞ்சிடுச்சா?.... நல்லது. "

ஊரு உலகத்துல இந்த டயட் இருக்கிறவங்க தொல்லை தாங்க முடியல. அவங்க இருக்கட்டும். வேண்டாங்கல. அதற்காக, ஒழுங்கா -  நல்லா சாப்பிடுறவங்க எல்லாம் ஏதோ வாழ்க்கையில் தப்பு பண்றவங்க மாதிரி ஒரு பில்ட் அப் கொடுக்கிறாங்க பாருங்க...... அந்த கொசுக்கடி தொல்லை, தாங்க முடியல.
 
நானும் முன்னொரு காலத்துல அந்த தப்பு செய்ஞ்சு இருக்கேன்.  அதாங்க, இந்த டயட்ல இருக்கிறது. 
 
டயட்ல இருக்கிறதுனா என்னன்னு கேட்கிற பாவப்பட்ட ஜீவராசிகளுக்காக ஒரு சின்ன குறிப்பு: 
 
 
  வேற ஒண்ணும் இல்லை.  வாய்க்கு ருசியாக என்னவெல்லாம் இருக்குதோ, அதெல்லாம் கொழுப்பு சத்துக்கு ஒட்டி பிறந்த தம்பின்னு நினைச்சு சாப்பிடாம ஒதுக்கி வச்சுடணும்.   ஆடு கோழியை தம்மு கட்டி அதுவரைக்கும் சாப்பிட்டுகிட்டு இருந்ததை விட்டுட்டு,  பரிகாரமாக - ஆடு கோழிங்க  சாப்பிடுகிற ஐட்டம் எல்லாம் அப்படியே  நீங்க மேயணும்.  சாரி,  சாப்பிடணும்.  அப்படி "கொத்தி கொத்தி" சாப்பிடும் போது,  எப்படியும் வயிறு முட்ட சாப்பிட தோணாது.  கால் வயித்துக்கு நிரப்புறதுக்குள்ளேயே,  போதும் போதும்னு ஆயிடும்.  கண்டிப்பா,  எப்படியும் வெயிட் குறைஞ்சுடும்.   
 
அப்புறம்,  நாம ஒதுக்கி வச்சு - அழகு பார்த்து - பெருமூச்சு விடுற ஐட்டத்தை எல்லாம்  மத்தவங்க சாப்பிடும் போது, உள்ளுக்குள்ள வயித்தெரிச்சல் பட்டுக்கிட்டு - காது வழியா வருகிற பொறாமை  புகையை மறைக்க - அவங்க சாப்பிடுறது எல்லாம்,  "மண்டையோடு பிளஸ் X மாதிரி எலும்பு துண்டுகள்" இருக்கிற label வச்சு வருகிற விஷ பாட்டில்ல வந்து இறங்கின சரக்குகள் மாதிரி "உவ்வே" காட்டி ஒரு நீள lecture (லெக்சர்) அடிக்கணும்.  
 
டயட் என்றால்  அம்புட்டுதேன், மக்காஸ்!   அப்படி நான் இருந்தப்போ, நான் எதிர்பார்த்த அளவுக்கு அங்கே வெயிட் குறையல..... வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்து,  டயட்ல இருந்து பார்த்தாலும் வெயிட் குறையல.  ஒரு நாள் வெறுத்து போய், வந்து எங்க அப்பா முன்னால வந்து உட்கார்ந்தேன். 
 
"என்ன ஆச்சு, சித்ராம்மா?" 
"நானும்,  ஒரு வாரமா இலை தழைனு  மாடு மாதிரி சாப்பிடாத குறையா டயட்ல இருக்கேன். இன்னும் கழனி பானையை மட்டும் தான் தேடி போகல. வெயிட் குறைவேனாங்குது." 
" ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு,  புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி?  நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?" 
(எங்க வீட்டிலே எல்லோரும் கொஞ்சம் chubby சைடு தான்..... ஹி, ஹி, ஹி....) 
" இருந்தாலும் அப்பா, நான் ட்ரை பண்ணுவேன்."
 
"ஏலே,  ஒல்லியாய் இருக்கிறதோ குண்டா இருக்கிறதோ முக்கியம் இல்லை. உடம்புல நோய் கீய் இல்லாம இருக்குதா என்று பார்ப்பதுதான் முக்கியம்."
"போங்கப்பா ...... நானே வீட்டுல fry பண்ணிக்கிட்டு இருக்கிற கோழி வாசனையை மோப்பம் மட்டும் பிடிச்சிக்கிட்டு,  கடுப்புல இருக்கேன்....."
 
அன்னைக்கு எங்க அப்பா சொன்னது எனக்கு புரியல.  ஒரு வேலை விஷயமாக,  சமீபத்தில் மெடிக்கல் செக் அப் செய்ய வேண்டியது வந்தது.  அதில் cholesterol டெஸ்ட்ம்  எடுத்தார்கள்.   எல்லாத்தையும் இப்போ பிரிச்சு கட்டி ஒரு வெட்டு வெட்டுற எனக்கு,  நார்மல் என்று ரிசல்ட்  வந்து விட்டது. (சரி...சரி..... கொழுப்பு, வெட்டி பேச்சில் மட்டும் தான் போல.... )  ஆனால், என்னுடைய தோழிக்கு அந்த கொடுப்பினை இல்லை. 
 
cholesterol அதிகம் இருந்த அவளிடம், டாக்டர்: " நீங்க ஏற்கனவே  வெயிட் குறைவுதான்.  ஆனாலும், உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாறுதல் வேண்டும் என்று நினைக்கிறேன்.  ரெட் மீட் (red meat) சாப்பிடுவதை விட்டுடுங்க."
"டாக்டர்,  நான் முட்டை கூட சாப்பிடாத வெஜிடரியன். "
"உடற்பயிற்சி செய்வீங்களா?"
"தினமும் அரை மணி நேரம் வாக்கிங் போவேன்." 
"பழங்கள் காய் கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்."
"salad - பழங்கள் தான் பொதுவாக இரவு நேர உணவாக சாப்பிடுவேன்."
"lunch?"
"சாதம்,  பருப்பு, காய் என்று......"
"ஹாங்...... உங்களுக்கு வெள்ளை சாதம் ஆகாது என்று நினைக்கிறேன்.  இனி,  பார்லி,  சோயா,  ராகி, ஓட்ஸ் என்று சாப்பிடுங்க. உங்களுக்கு cholesterol problem - hereditary  (பரம்பரை) என்று நினைக்கிறேன். அதான், நீங்க எவ்வளவு கவனமாக டயட் இருந்தாலும் உங்களுக்கு cholesterol அளவு அதிகம் வந்து விட்டது."
"ஞே.......!!!!"


வாழ்க்கையே வேடிக்கையானதுதான்.  அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை.  ஆரோக்கியத்துக்காக டயட் இருக்க வேண்டியதுதான். வேற வழி இல்லை. அழகுக்காக??????   ம்ம்ம்ம்..........!!!   "Fair and lovely" மாதிரி "ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா?  கிடைச்சா சொல்லுங்க.... முதல் tube எனக்குத்தான். ஹி, ஹி, ஹி, .....

படங்கள் :  நன்றி கூகுள் லேடி.


Thursday, May 5, 2011

அன்னையர் தின பெருமூச்சு

மீண்டும் வணக்கங்கள்:

என்னை குறித்து கடந்த சில நாட்களாக - ஈமெயில் வழியாகவும் - போன் மூலமாகவும் - facebook messages மூலமாகவும் நலம் விசாரித்த அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்துச்சு.

கடந்த இரண்டு வாரங்கள் - எப்பப்பா....
புயல் அடிச்சுது......
பேய்மழை அடிச்சுது ......
மரங்கள் விழுந்துச்சு ......
வேலிகள் பறந்துச்சு......
வெள்ளம் வந்துச்சு.....
இன்டர்நெட் தொடர்பு போச்சு.....
தொலைபேசி தொடர்பு போச்சு....
கரண்ட் கட் ஆச்சு.....

எல்லாம் "old is gold" technology style தான்....

நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன் - நோ ஸ்கூல் -
in fact , இவை இல்லாமல் இருந்தால் கூட, உலகம் எப்போவும் போல தான் இருக்குது. இவை எல்லாம் தாண்டி உலகம் எப்படி இருக்குது என்று தெரிஞ்சிக்க முடிஞ்சுது.
அதிசயம் என்னவென்றால், நோ கம்ப்ளைன் - நோ புலம்பல் - நோ அழுகை.

ஆனால், ஒண்ணு மட்டும் சொல்றேன். போதுமான அளவுக்கும் மேலே மழை பார்த்து விட்டோம். மெல்ல சாரல் அடிக்கும் மழையில், அழகு தெரிகிறது. ரசிக்க முடிகிறது. இப்படி புயல் மழை வந்தால், ஒதுங்கி இருக்கத்தான் செய்கிறது. பயமுறுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு மழை மட்டும் இல்லை, மழை பற்றிய கவிதைகள் - மழையில் காதல் பழுத்துரிச்சு; கத்திரிக்காய் புழுத்துருச்சு என்றெல்லாம் வருகிற கவிதைகள் பக்கத்தில் கூட வருவதாக இல்லை. மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!
போர்டு கேம்ஸ் எடுத்து வச்சு , குட்டீஸ் கூட விளையாடுறது. (வெளியில் அடிச்ச புயல் காத்திலேயும் மழையிலேயும் அங்கே போய் விளையாட அனுப்ப முடியல) -
சீக்கிரமே தூங்க போறது. ஒரே ஒரு பிரச்சனை - அதிகாலையில் சீக்கிரமே முழிப்பு தட்டிடும். திரும்பவும் அதிகால ஆதிகால வாழ்க்கை தொடர்ந்துச்சு.

மாறுதல்கள் - எப்படி இருந்தாலும் - வித்தியாசமா இருக்கிறது, ஒரு விதத்தில், நல்லாத்தான் இருந்துச்சு. பயந்த மாதிரி எதுவும் இல்லை.

சொல்ல மறந்துட்டேனே.... எங்க வீட்டில் கூடு கட்டி இருந்த பறவையின் கூடு, புயல் காற்றில் கீழே வந்து விழுந்து கிடந்தது. அது இருந்த இடத்தில், மீண்டும் எடுத்து வைத்தோம். கீழே புல் தரையில் விழுந்து கிடந்த இரண்டு பறவை குஞ்சுகளையும் தேடி கொண்டு வந்து வைத்தோம். ஒன்று மட்டும் கிடைக்கவே இல்லை. என்ன ஆச்சோ தெரியல. மற்ற இரண்டும் வளர்ந்து, பறந்து போக ஆரம்பிச்சிடுச்சு.

எங்கள் வீட்டுப் பகுதியில் தான் முதலில் எல்லாவற்றையும் சரி செய்தார்கள். ஏதாவது சொல்லணும் போல இருக்குது. ஆனால், தன்னடக்கம் தடுக்குது.

இன்டர்நெட் connection வந்ததும், பதிவு பக்கம் வரலாம் என்று நினைத்தேன். ரோம் நகரம் பத்தி எரிந்துகிட்டு இருந்த போது, நீரோ மன்னன் fiddle வாசித்து கொண்டு இருந்த மாதிரி, ஊரே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிட்டு இருந்த போது, சித்ரா பதிவு வாசித்து கொண்டு இருந்தாளாம் என்று நாளை வரலாறு சொல்லாக்கூடாது பாருங்க...... ஹி, ஹி, ஹி, .....

விட்ட கதையை தொடர்ந்து சொல்றேன். கரண்ட் மற்றும் இன்டர்நெட் தொடர்பு எல்லாம் சரி பண்ணாங்களா...... அப்புறம், கரண்ட் - போன் - இன்டர்நெட் வராத ஒரு நண்பரின் குடும்பம் எங்க வீட்டில் வந்து தங்கி இருந்தாங்க. அவங்க ஏரியாவில் சரி செய்ததும் கிளம்பி போனாங்க. அதுவரை, நல்லா டைம் பாஸ் பண்ணோம். நாள் பூரா, சூப்பர் அரட்டை கச்சேரி தான்.

முதலில் புயல் ஏன்டா வந்துச்சுன்னு நினைச்சேன். ஆனால், அது வர வரைக்கும் - நான் உண்டு - என் குடும்பம் உண்டு - என் வலை உலக பொழுதுபோக்கு உண்டு என்று குறுகிய வட்டத்தில் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இருக்கிற வாழ்க்கையை - ஆசிர்வாதங்களை மதிக்கிறது - மற்றவர்களுக்கு உதவுறது - குடும்பத்தோட ஜாலியா டிவி தொல்லை இல்லாமல் லூட்டி அடிக்கிறது என்று புது பொலிவை அடையாளம் காட்டிவிட்டு சென்று இருக்கிறது.

ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா.....

இந்த மாதிரி வெள்ள சமயங்களில் விளையாடுகிற காய்ச்சல் - வாந்தி - சரியா எங்க வீட்டிலேயும் கதவை தட்டி, குட்டி மகனிடம் ஆஜர் போட்டுட்டு போச்சு. இப்போதான் சரி ஆச்சு.

நேத்து, என் கணவர் கேட்டார். " வருகிற Sunday , "Mother's Day". இரண்டு வாரங்களாக tough and rough time. எல்லோரையும் நல்லா கவனிச்சிக்கிட்ட. சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு. உனக்கு என்ன வேண்டும்?"

"Right now, I am super tired. Mother's Day அன்று, நான் பொறுப்புள்ள அம்மா என்று நினைக்க விடாதீங்க..... நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!



அப்புறம், இந்த வார இறுதியில் Michigan பக்கம் யாராவது போனீங்க என்றால், இரண்டே வாரங்களுக்கு பூத்து குலுங்கும் Tulip மலர்களுக்கு என்று Festival ஒன்று Holland என்ற ஊரில் நடக்கும். அதை பார்க்க மறக்காதீங்க. சில வருடங்களுக்கு முன், "Mother's Day Sunday" அன்னைக்கு அங்கு சென்று இருந்தோம்.

பொதுவாக, மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் தான் கொண்டாட்டங்கள் நடைபெறும். வெள்ளை நிறத்தில் இருந்து deep purple வரை உள்ள பல வண்ணங்களில் - மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று - tulip மலர்கள் பூத்து குலுங்குகின்றன.


Holland, Michigan - Tulip Festival: http://www.tuliptime.com/



Dutch மக்கள் பலர் அங்கே வந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். ஊரில் கட்டடமைப்பு - பழக்க வழக்கங்கள் எல்லாம் டச் ஸ்டைல் தான். திருவிழா கொண்டாட்டங்களில், ஆயிரக்கணக்காக நடனக் கலைஞர்கள் ஊருக்கு நடுவில் உள்ள ஒரு பூங்காவில் கூடி டச் பாரம்பரிய நடனங்கள் ஆடி காட்டுவார்கள். சூப்பர்!


Clog எனப்படும் மர ஷூஸ் போட்டு கொண்டு ஆடியது அருமையாக இருந்துச்சு.




மனதை கொள்ளை கொண்ட அழகு மலர்கள் - நடனங்கள் கண்டு ரசித்து கொண்டாடிய அன்னையர் தினத்தை மறக்க முடியாது.



தென்றல் வருடுவதும் புயல் அடிப்பதும் வாழ்க்கையில் சகஜம் போல. எல்லாம், நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை கடந்து போய் கொண்டு இருக்கிறது.

படங்கள்: நன்றி: கூகுள் புயல்.