Wednesday, March 31, 2010

கண்கள் இரண்டால்...

இப்பொழுது தான், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து விட்டு, எனக்கு வந்த தொடர் பதிவு அழைப்புகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு வந்து பார்த்தால், அதற்குள்  முகுந்த் அம்மா, இன்னொரு அழைப்புக்கு பத்திரிகை வைத்து விட்டார்கள்.

http://mukundamma.blogspot.com/2010/03/love-in-heathrow.html
பெண் பார்த்த / போன அனுபவத்தை பத்தி எழுதணுமாம்.
பெண் பார்க்கும் படலம் இல்லை. ஆனால். சந்தித்த விதம்:  

நெல்லை மண்ணின் மகளாகிய  சித்ரா தேவியை   எனது  மாமன் மகன்,  பிரவீன்   மணப்பதாக பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டு இருந்தது.  நான் பிரவீனை  காதலிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை.
பிரவீனின்  தாயின் வெடுக் பேச்சுக்களும் தீராத வம்புகளும் என் உள்ளத்தை நெருடாமல் இல்லை. பயம் என்று இல்லை -  என்றாலும் விருப்பமில்லை.
நம்புங்க.  அப்பொழுது, அதிகம் பேசாமலும், அதிர்ந்து பேசாமலும் இருக்க பழகி விட்ட எனக்கு , துணிந்து பேச பக்குவம் இல்லாததால், மனதுக்குள் புழுக்கம்.  பிரவீனின்  நல்ல மனதையும் காயப் படுத்த தோன்றாத என் மனதில், குழப்பங்களுக்கு பஞ்சமில்லை.

உறவினர் ஒருவரின் திருமணம் செல்ல, நெல்லை எக்ஸ்பிரஸ் ஏறி அமர்ந்த அந்த நல்ல நாளில்,  பிரவீனும் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.   அடுத்து நடக்கவிருக்கும் திருமணமாக, எங்கள் இருவரையும் முன் நிறுத்தி பெரியவர்களின் பேச்சு ஆரம்பித்தது.  தமிழ் வார இதழை கையில் வைத்து கொண்டு, படிப்பது போல வெறித்த பார்வையுடன் ஒதுங்கி அமர்ந்தேன்.  பிரவீன், இதை கவனிக்காமல் இல்லை.  எப்பொழுதும் நான்  பிடி கொடுக்காமல் பேசுவதில் தயங்கி போய் இருந்தவன்,  இன்று புரிந்தோ புரியாமலோ அவனும் அமைதியாக ஒதுங்கி அமர்ந்தான்.  ரயில், கோவில்பட்டி ரயில்  நிலையத்தை தாண்டும் போது, தண்ணீர் தருவது போல அருகில் வந்து, "கட்டிக்குவ இல்லியா?" என்றதும்,  காதில் விழாதது போல தண்ணீர் குடித்து விட்டு முகத்தை திருப்பி கொண்டேன்.

ரயில், சாத்தூர் நிலையத்தில் நின்ற இரண்டு நிமிடங்களில், பரபரப்புடன் இருவர் ஏறி கொண்டனர்.  தோழமையாய்  பிரவீன் அருகில் அமர்ந்து விட்டு, ரயில் சிநேக பார்வையுடன் அறிமுகம் செய்து கொண்டனர்.  தற்செயலாக,  வார இதழில் இருந்து பார்வை விலக்கி, புதிதாக வந்திருந்த இருவர் பக்கமும்  செலுத்திய அந்த தருணத்தில் - இருவரில் ஒருவர் , தன் பார்வையை என் பக்கம் எதேச்சையாக திருப்ப --------- சிலிர்த்தது  தேகம் மட்டும் இல்லை,  உள்ளமும்.  அருகில் அப்பாவியாய் இருந்த பிரவீனை  பார்த்ததும், ஏதோ தவறு செய்வது போல மனம் குறுகுறுத்தது. குனிந்து கொண்டேன்.


கண்களால்  தூண்டிலை  போட்டவரிடம், என் கயல் விழிகள் மாட்டிகொண்டன.  மீண்டும்  மீண்டும் சிக்கினேன் - தப்பினேன்.  இனி அந்த பக்கம் திரும்பவே கூடாது என்று அறிவு உத்தரவிட்டதும், என் மனம் ஏக்கத்துடன் போராடி கொண்டிருந்தது.   என் கையில் வைத்து இருந்த வார இதழை,  பிரவீன்  கேட்க, கொடுக்க நிமிர்ந்தவள், மெல்லிய புன்னகையுடன் அருகில் அமர்ந்து இருந்தவரை நோக்கினேன். "ஹலோ" என்ற ஒலி காதில் விழுந்து,  இதய பூட்டுக்களை உடைத்து எறிந்தது.   சந்தோஷப் புயல் சூறாவளியாய் உருவெடுக்க,  முத்தாய்ப்பாய் பதில் "ஹலோ" சொன்னேன். அதன் பின், இருவரும் பேசவில்லை.  தேவையும் இல்லை.  ஆனால், நான்கு விழிகளில் நவரச உணர்வுகளும் காதல் மொழியும் வழிந்த வண்ணம் இருந்தன.

அறிந்த வயது முதல் பழகிய ப்ரவீனுடன் எனக்கு  இல்லாத தேடல் ஒன்று, ஐந்தே நிமிடங்களில் அறிமுகமான ஒருவரிடம் இருப்பதை கண்டு, என்னை நானே திட்டி கொண்டேன்.  ஒரு வழியாக, என்னை என் மாமாவே அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.   இறைவன் எனக்கென்று வைத்திருந்த வரமாய், சாலமன்.   திடீர் என்று கலகலப்பாக மாறினேன். அனைவரிடமும் பேசினேன், சிரித்தேன்.  எனக்குள் வந்த மாறுதலை பிரவீன்  கவனித்து இருக்க வேண்டும்.
 "சித்ரா, இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாள்" என்று உரக்க சொன்னான். வெட்க சிரிப்புதான், என் பதில்.
 அந்த வெட்கத்தையும், முதல் முதலாய் அடையாளம் கண்டு கொண்டான்.

இரவு உணவுக்கு பின், வாசல் அருகே நின்று கொண்டு, வேகமாக முகத்தில் அடித்து கொண்டிருந்த காற்றில், என் பயங்களை தொலைத்து கொண்டு, சந்தோஷ வானில் சிறகடித்து -  கனவுகள் காண நின்றேன்.  பிறருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அந்த உணர்வுகளை,  அனுபவித்து  பார்த்தவர்களுக்கு மட்டுமே, அதன் வீரியம் புலப்படும்.


பிரவீன்  அருகில் வந்தான். "சித்ரா, உனக்கு சாலமனை ரொம்ப பிடித்து இருக்கிறது. அவருக்கும் உன்னை ரொம்ப பிடித்து இருக்கிறது போல. அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார்." என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.
இப்பொழுது, எனக்கு குற்ற உணர்வு மேலோங்க, "பிரவீன், என்ன சொல்லவென்றே தெரியவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. உளறாதே" என்றேன்.
"இல்லை சித்ரா.  எனக்கு, உன் மேல் வைத்து இருக்கும் அன்பை வெளிக்காட்ட தெரியவில்லை. ஆனால், உன் உணர்வுகள் ஒவ்வொன்றையும் எனக்கு புரிந்து கொண்டே இருக்கும்.  இன்று உன் முகத்தில் இருக்கும் சந்தோஷம், எனக்கு புதிது. இன்னும் அழகாக தெரிகிறாய். "
என் கண்களில் நீர்த்துளிகள்.  பிரவீனின்  இந்த நல்ல உள்ளத்தையும் அன்பையும் நான் ஏன் இன்று வரை புரிந்து கொள்ள முயலவில்லை? இந்த நொடியில் புரிந்த பின்னும்,  அவன் மேல் காதல் உணர்வு ஏன் என்னுள் துளிர்க்கவில்லை?
பருவத்தை குறை சொல்வதா?  காரணம் தெரியவில்லை.

பிரவீனின்  பெரு முயற்சியால்,   எதிர்த்து கொண்டிருந்த  வீட்டு பெரியவர்களின் சம்மதத்துடன்,  ஆறு மாதங்களுக்கு பின், சாலமன் + சித்ரா திருமணம் நடந்தேறியது.   வெறும் ரயில் சிநேகம் என்று இருக்க வேண்டியது,  காதல் பயணங்கள் முடிவதில்லை என்று தொடர வருகிறது.  பிரவீன், இரண்டு வருடங்களுக்கு பிறகு, தூரத்து உறவான இன்னொரு அத்தை பெண்ணை திருமணம் செய்து கொண்டு நெல்லையிலேயே வளமையுடன் இருக்கிறார்.

பிரவீனை கணவனாக  கண்டு கொண்டு  நேசிக்க போராடி தோற்று இருக்கிறேன். ஆனால், இன்று ஒரு அண்ணனாய் அடையாளம் கண்டு கொண்டு, பாசத்தால் அவனுடன் உரிமையுடன், இப்பொழுதும் பழக முடிகிறது.  பிரவீனை  திருமணம் செய்து இருந்தால் கூட, இந்த மரியாதையும் மதிப்பு மிக்க அன்பும்  பாசமும் அவர் மேல் வைத்து இருப்பேனா என்பது சந்தேகமே.    சில சமயங்களில், உறவு மாறி வரும் போது, ஆழமான அன்பு, அழுத்தமாய் இதயத்தில் கோவில் கட்டி விடுகிறது.

பின் குறிப்பு:  இந்த பதிவில் வரும் சித்ரா தேவி நான் தான் என்றும் - சாலமன் , எனது கணவர் சாலமன் தான் என்றும், பிரவீன்  எனது மாமன் மகன் தான் என்றும்  - நீங்கள்  நினைத்து  கொண்டு வாசித்து இருந்தால் கம்பெனி பொறுப்பு எடுக்காது.  நிச்சயமாக இது எங்கள் காதல் கதை அல்ல.  ஏப்ரல் முதல் தேதி என்று நினைவு படுத்தி கொள்கிறேன்.
ஆட்டோ அனுப்புகிறவர்கள், என்னை தொடர் பதிவுக்கு  அழைத்தவருக்கு  அனுப்புமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள். 
(நன்றி: stills - சுப்ரமணியபுரம் படம்)

Monday, March 29, 2010

ஒரு நேர்காணல் (interview)

சென்ற வாரம்: விருது வாரம்.

ஜலீலா அக்கா,  ஆசியா ஒமர்,  ஜெய்லானி,  பிரியா ராஜ் மற்றும் மின்மினி எல்லோரும்: Sunshine Award கொடுத்தார்கள்.
SASHIGA ஒரு விருது: Blog Loving Award  கொடுத்தார்கள். நன்றி.

மேலும்,  SASHIGA அவர்கள் -  பின்னூட்டம் பற்றிய தொடர் பதிவுக்கும், சங்கவி அவர்கள் - பேருந்து காதல் தொடர் பதிவுக்கும்  எழுத அழைப்பு கொடுத்து இருந்தார்கள்.

நான், ப்லாக் எழுத வந்த புதிதில் பேட்டி கொடுத்தது.
http://konjamvettipechu.blogspot.com/2009/11/blog-post_04.html
 அதற்கு அப்புறம், இப்பொழுதுதான் பேட்டி கொடுக்க  நேரம் வந்தது:

விருது வழங்கிய குழுவினர் மற்றும் தொடர் பதிவு குழுவினர் :  வாழ்த்துக்கள், சித்ரா!
சித்ரா:              நன்றிகள் பல.

சங்கவி:    பேருந்து காதல்???
சித்ரா:      மகளிர் பேருந்தில் போய், மகளிர் கல்லூரியில் படித்தவள். மகளிருடன்  தோழமையுடன்தான்  பழகி இருக்கிறேன்.
சங்கவி:     நல்லது. பொதுவாக வரும் பேருந்து காதல் பற்றி  உங்கள் கருத்து?
சித்ரா:       There is difference between lust and love.  அது எத்தனை பேருக்கு புரிந்து, காதல் வந்து இருக்கும் என்று தெரியவில்லை.

சங்கவி:      பேருந்து காதல் இல்லைனா பேருந்து கலாய்த்தல் பற்றி?
சித்ரா:       நான் போன பேருந்தில் வந்த டிரைவர்கள், தாத்தா வயதை உடையவர்கள். அவர்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கிய வேகத்துக்கு, பேருந்தையும் ஓட்டி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம்.
சங்கவி:    கண்டக்டர்கள்?
சித்ரா:      ரெண்டு ஆட்கள்  மாற்றி மாற்றி வருவார்கள்.
                ஒருவருக்கு: நிச்சயமா மூல வியாதி. இல்லைனா, அந்த நேரம் அவர், ஐஸ்வர்யா ராய் அவர்களை தீவிரமாக    காதலித்து விட்டு,   காதல் தோல்வி ஆகி இருந்திருக்க வேண்டும்.  எப்பொழுதும், முகத்தை உர் என்று வைத்து இருப்பார். ஒரே,  லொள், லொள், லொள் மயம்தான்.
அடுத்தவருக்கு:  பவுடர் டப்பா கிட்ட, முகத்தை தாண்டி வருவாயா என்று கேட்டு, முகத்தை விட்டு ரெண்டு இன்ச் நீளத்துக்கு இருக்கிற மாதிரி போட்டு வருவார்.  சென்ட் bottle என்ற பெயரில் ஏதோ ஒரு நாத்த திரவத்தை அடித்து விட்டு வர - நாங்க மூக்கை பிடித்து விட்டு உட்கார்ந்தால்,  இறங்க வேண்டிய ஸ்டாப் வரும் வரை மூர்ச்சையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலைதான் பெரிதாக இருந்தது.

ஜலீலா அக்கா:  நல்லது.   அடுத்து எந்த விருது வாங்க "உழைத்து" கொண்டு இருக்கிறீர்கள்?
சித்ரா:              நான் இதற்கு எல்லாம் உழைப்பது இல்லை. இது அன்புடன் கொடுக்கப்படுவது.
                         ஆனால், அடுத்து நீங்கள் தரும் விருதை, கலைஞர் அவர்களுக்கு   நடக்க போகும் அடுத்த  (97,634 வது?) பாராட்டு விழாவில் வைத்து கொடுத்தால் , நீங்களே சமைத்து தரும் பிரியாணியை சாப்பிடும்  அளவுக்கு சந்தோஷப் படுவேன்.
  
 ஜெய்லானி:  நீங்கள் ஏன் யாருக்கும் விருது வழங்குவது இல்லை.
சித்ரா:            நமக்கு வாங்கித்தான் பழக்கம். இன்னும் கொடுக்க ஆராம்பிக்கவில்லை. எல்லாம் என் பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் போது, வச்சுக்கலாம் என்று இருக்கேன்.  பக்கா அரசியல்வாதி பேச்சு என்று நினைக்காதீர்கள். 2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன்.   தமிழ் நாட்டு அரசியல் சொல்லி தந்த பாடம் #10234

பிரியா ராஜ்:   இன்னும் விருது வாங்காமல் இருக்கும் பதிவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
சித்ரா:           ஒரே வாரத்தில் ஆறு விருதுகளை வாங்கிய எனது படத்தை வைத்து மூன்று நாட்களுக்கு  பூஜித்து வந்தால், சீக்கிரம் ஒரு விருது பெற்று கொள்ளும்  வாய்ப்பு இருக்கிறது என்று பதிவர் சாஸ்த்திரம் சொல்கிறது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்னொரு பதிவரும் சித்ரா என்ற பெயரில் இருக்கிறார் - பின்னூட்டம் இடுகிறார்.  ஆனால்,  நான் தான்  profile photo வுடன் வலம் வருகிறேன். குழப்பங்களை தவிர்க்க, சொல்லி விடுகிறேன். 

ஆசியா ஒமர்: சித்ரா, உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.
மின்மினி:       கொஞ்சம் இல்ல, ஓவரா -  ஓவரா இருக்கு. தாங்க முடியல.

SASHIGA:   பின்னூட்டங்கள் பற்றி?
சித்ரா:           வாழ்த்துரை போன்றது. எனக்கு வரும்:
  :-)  முதல், மிகவும் நீ......ண்..... ட..... கமென்ட் வரை எல்லாவற்றையும் விரும்பி படிப்பேன்.  ஒன்று தெரியுமா? தமிழிஷ் ஓட்டு மற்றும் தமிழ் மணம் பரிந்துரை, மொய் எழுதுற மாதிரி. வாழ்த்துரை சொல்கிறவர்கள் எல்லாம், மொய் எழுதுவது இல்லை. மொய் எழுதுகிறவர்கள் எல்லாம், வாழ்த்துரை சொல்வது இல்லை.  பலர், வாழ்த்துரையும் சொல்வது இல்லை, மொய்யும் தருவது இல்லை.   இருந்தாலும், வரும் அனைவருக்கும் என் நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.

SASHIGA:  நீங்கள்????
சித்ரா:          நான் வாழ்த்துரை (பின்னூட்டம்) வழங்கும் இடம் எல்லாம், மொய் எழுதும் நோட்டு இருந்தால் மொய் கொடுக்காமல் வருவது இல்லை.  சிலர், எங்கே வைத்து இருக்கிறார்கள் என்று தேட வேண்டியது இருக்கிறது. சிலர், மொய் வேண்டாம். நீங்கள் வந்ததே போதும் என்று இருக்கிறார்கள். எங்கே ஓட்டு பட்டை, எங்கே பரிந்துரை - அது இல்லாமல்,  சும்மா வாழ்த்திவிட்டு எனக்கு திரும்பி வர என் மனதுக்கு "கஷ்டமா" இருக்குனா பாத்துக்கோங்க.

ஆசியா ஒமர், மின்மினி, ஜெய்லானி, ஜலீலா அக்கா, பிரியா ராஜ், சங்கவி,  sashiga: 
உங்கள் "நல்ல" மனது புரிந்து விட்டது, சித்ரா.     வாழ்த்துக்கள்.   உங்கள் பதிவுலக வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை அருமையா சொல்லி இருக்கிறீர்கள்.    பகிர்வுக்கு நன்றி.   :-)     நடத்துங்க, நடத்துங்க......... நல்லா இருக்குதுங்க. ரொம்ப எதார்த்தமாக இருக்கு, சித்ரா.    அசத்தல்.  மனதை நெகிழ வைத்து விட்டீர்கள், சித்ரா.   நல்ல கவிதை - சாரி, பேட்டி.  சே,  நீங்கள் எங்களுக்கு  எழுதும்  பின்னூட்டம் படித்து படித்து .....  எங்களுக்கும் அப்படியே பேச வருது,  சித்ரா  .......
சித்ரா:      :-)))

Tuesday, March 23, 2010

என்னை மெருகேற்றிய மனிதர்கள்


நான் ஆண்களை வெறுப்பவள் அல்ல. சிலர் என் ரசனைக்கு உரியவர்கள் - சிலர் என் பாராட்டுக்களுக்கு உரியவர்கள் - சிலர் என் மரியாதைக்கு உரியவர்கள் - சிலர் என்னை செதுக்கியவர்கள் - சிலர் என் சந்தோஷ சிரிப்புக்கு உரியவர்கள் - சிலர் என் ஜொள்ளுக்கு உரியவர்கள் - இப்படி................ 

எனது முந்தைய பதிவை படித்து விட்டு,  அதில் உள்ள நகைச்சுவை பிடிப்பை உணர்ந்து, அத்தனை பேரும் சிரித்து கொண்டார்களே தவிர, ஒருவர் கூட சண்டை போட்டு கொண்டு, தேவையில்லாத விவாதத்துக்கு வரவில்லை.  அனைவருக்கும் நன்றி. 

நான் சந்தித்ததில் - பழகியதில் - படித்ததில்/கேள்விப்பட்டதில்  - என்னுள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய சில முக்கியமான ஆண்களை பற்றி ----- இந்த பதிவில் எழுதுகிறேன்.
இன்று நான்,  நானாக இருப்பதற்கு இவர்கள் என் வாழ்வில் - என் சிந்தனையில் - என் மனதில் உண்டாக்கிய பாதிப்புகளே காரணம்.  I thank my Lord for each and every one of them.
                       

திரு.பொ.ம.ராசமணி.
Mr. Po.Ma. Rasamani


நான் செய்த தப்பை,  நான்  பெரிது படுத்தாமல், என்னுடைய உறவினர் ஒருவர் செய்த சின்ன தவறை பெரிது படுத்தி கோபத்தில், நான்  பொங்கி கொண்டிருந்த போது -  அவர் ஒரு புன்னைகையுடன்:

" ஒரு வலைக்குள் மீன் போய்  மாட்டும்  - அந்த வலைக்கு, மீன் வலை என்று பெயர்.
ஒரு வலைக்குள் விலங்கு  போய் மாட்டும்  - அந்த வலைக்கு, விலங்கு  வலை என்று பெயர்.
ஒரு வலைக்குள்  மனிதன் போய் இருப்பான் - அந்த வலைக்கு கொசு வலை என்று பெயர்.
மனிதன் எப்பொழுதுமே, தன்னை விட தன் சூழ்நிலைகளையும் மற்றவர்களையும்,  குற்றம் சொல்லி  காரணம் காட்டி  பேசுவதில் கில்லாடிகள்." என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட,  என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

இன்றும்,  எந்த மனிதரோடும் பிரச்சினை வரும் போது, முதலில் என் தவறு என்ன என்று ஆராயும் மனப்பக்குவத்தை தந்தவர்.
50 வருடங்களுக்கு மேலாக, தன் நகைச்சுவை பேச்சினாலும் எழுத்துக்களாலும்,  "சிரிப்பு தரும் சிந்தனைகள்" தந்தவர்.
இவரை பற்றி தனியாய் ஒரு பதிவு பின்னொரு நாளில்.................!!!
 

 Dr.அன்டோ ராஜ்குமார்.
Dr. Anto Rajkumar

M.B.B.S.,   D.P.M., M.D. (Psychiatry) -  ஒவ்வொரு டிகிரி வாங்கும் போதும் ஒரு கோல்ட் மெடலும் சேர்த்து  வாங்கி,  ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவராக, சின்ன வயதிலேயே CMC, வேலூரில் கலக்கி கொண்டிருப்பவர்.  சுனாமிக்கு பிறகு  பாதிக்கப்பட்ட மக்கள் நடுவில்,  இவர்  நடத்திய ஆராய்ச்சி கட்டுரையும் மற்றும் சில research articles, British Journal of Psychiatry யில் வெளி வந்திருக்கின்றன. பல international conference சென்று கருத்தரங்கில் பங்கு பெற்று வந்திருக்கிறார்.

 இதை பற்றியெல்லாம் தற்பெருமையுடன் பேசாமல்,   Psychiatry department cricket team (CMC) -  முந்தைய வருட சாம்பியன் ஆன Pharmacy cricket  (CMC) அணியுடன் மோதி  - எப்படி அவரும் அவரது அணியினரும் விளையாடி  ஜெயித்தார்கள் என்பதை  ஒரு உலக கோப்பை வென்ற ஆர்வத்துடன் விவரித்து கூறியது, என்னை ஆச்சர்யப்பட வைத்தது.  தன் தொழிலே வாழ்க்கை என்று இருக்காமல்,  தனது மனதுக்கு பிடித்த - ஆர்வத்துக்குரிய - விளையாட்டில்  சந்தோஷப்படுவதை கண்ட பொழுது - பெரிதாக ஒன்றும் சாதிக்காமலே, என்னுள் குடியிருந்த என் கர்வம்,  என்னை விட்டு விலகி சென்றது.


Solomon :
சாலமன்:

மேற்கண்ட படத்தில் இருக்கும் இவர் சாலமன்.  எனக்கு காதலிக்க கற்று தரும் முன், பெரிய பெரிய காதல் காவியங்கள் கூட அபத்தமாக தெரிந்தது.
எனது ஆத்மார்த்தமான ரசிகர் -  உண்மையான விமர்சகர் - ஆருயிரில் கலந்துள்ள நண்பர் - உற்சாகமாக சுக துக்கங்களில் பங்கு எடுத்து கொள்பவர் -  என்னை எனக்கு அடையாளம் காட்டியவர்.  நாங்கள் சந்தித்தது, எனக்கு இறைவன் தந்த வரம்.

SAINT FR.DAMIEN:

ஹவாய் தீவுகளில் ஒன்றான மொலோகோய் தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வந்த சுமார் 8000 தொழு நோயாளிகளுக்கு நடுவில்  வாழ்ந்து   சேவை செய்து  வந்தார். அவர்களில் ஒருவராக தானும் இருந்து அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வந்த அவருக்கும் தொழு நோய் தாக்கி இறந்தார்.  மேலும் விவரங்களுக்கு: 
http://en.wikipedia.org/wiki/Father_Damien

 ஒரு சின்ன உதவி,  நண்பருக்கு செய்ததை  கூட பெரிதாக  நினைத்து கொண்டு, என்னை நானே ஒரு சுய நீதிமானாக (self-righteous person) பாராட்டி கொண்டிருந்தேன்.    தன்னலமற்ற சேவை செய்ய, தன்னையே அர்ப்பணித்த இந்த புனிதரின் உயரிய உள்ளம், என்னை யோசிக்க வைத்தது. நிறை குடம் தளும்பாது என்பதை புரிந்து கொண்டேன்.

  ரஜினிகாந்த்:


இவரையும் -  இவர் படங்களையும் -  இவர் நடிப்பையும் - இவர் கொள்கைகளையும் பலர் பலவிதமாக விமர்சிக்கலாம். எனக்கு எதுவுமே முக்கியம் இல்லை. விமர்சிப்பவர்கள் -  தங்களின்  அறுபதாவது  வயதிலும்,  அந்த ஸ்டைல் லுக்கில் இருந்து கொண்டு விமர்சிக்கட்டும்.
சிறு வயதில், எந்த உற்சாகத்தோடு இவர் படங்களை பார்த்தேனோ, அதே உற்சாகத்தோடு இன்றும் பார்க்கிறேன். விசில் அடிக்க தெரியாத நான், ஒரு umpire விசில் வாங்கி வைத்து இருக்கிறேன். கூட்டத்தோடு கூட்டமாக ஆட்டம் போட்டு, விசில் அடித்து கலகலக்க.  அவரது ஒவ்வொரு படத்தையும்,  இங்குள்ள தியேட்டரில்,  பல நூறு மைல்கள் பயணித்து சென்று,  பார்க்கும் போது  எனக்குள் இருக்கும் சிறுமி குதூகலத்துடன் வெளி வந்து, என்னை மீண்டும் பால்ய காலத்துக்கு அழைத்து செல்கிறாள்.  I never miss my childhood.

 DAVE BARRY:


Pulitzer Prize (1988) வாங்கிய அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் (humor columnist). The Miami Herald தின பத்திரிகையில், 1983 - 2005 தொடர்ந்து எழுதி வந்தவர். பல புத்தகங்களும் நாவல்களும் எழுதி இருக்கிறார். 
Barry has defined a sense of humor as "a measurement of the extent to which we realize that we are trapped in a world almost totally devoid of reason. Laughter is how we express the anxiety we feel at this knowledge."
தன் வீட்டு அடுப்படியில் இருந்து நாட்டு அரசியல் வரை -  எந்த வரைமுறைக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் -  தன் கருத்துக்களை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவதில் கில்லாடி.
இவரின் பார்வையில் உலக - சமூதாய  பிரச்சனைகளை பார்க்க ஆரம்பித்த பின், உலகம் - எனக்கு அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை.


 என் உடன் பிறவா சகோதரர், செல்வகுமார் அண்ணன்,   தன் வேலைப்பளு மத்தியிலும் நேரம் ஒதுக்கி,   எனக்கு  கரிசனையுடன் அறிவுரை கூறுபவர்.  எனக்கு  இருக்கும் வேலைகளை காரணம் காட்டி கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு தேவையான என் நேரத்தை ஒதுக்க  நான், இவரிடம் கற்று கொண்டேன்.

இவர்கள் தவிர,  எனக்கு நிறைய கற்று கொடுத்த, என் அருமை நண்பர்களின்  பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருவர் பெயர் சொல்லி, ஒருவரை விட்டு விட எனக்கு பிடிக்காத காரணத்தாலும்  -  பதிவின் நீளம் கருதியும், இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.



Sunday, March 21, 2010

பிடித்த ஆண் இனம்

 http://karuvelanizhal.blogspot.com/2010/03/blog-post_19.html
 இந்த முறை, நம்மை வெத்திலை -  பாக்கு - பழம் வைத்து  தொடர் பதிவுக்கு அழைத்திருப்பவர் - திரு.பா.ரா. அவர்கள்.
 ஆண்கள் பற்றி எழுதணுமாம்:


ஆண் மயில்:

ஆண் வான்கோழி:

 ஆண் phesant :

சேவல்:
ஆண் சிங்கம்:
ஆண்  யானை:

Bird of Paradise:

ஆண் antelope:


ஆண் வட அமெரிக்க கார்டினல்:


ஆண் blue bird of paradise:


ஐந்தறிவு உள்ள பறவைகள் -  மிருகங்களில் - ஆண் இனங்களே பேரழகும் , பெண் இனத்தை கவர்ந்து இழுக்கும் வண்ணங்களும்,  வசீகரிக்கும் நடன அசைவு  திறமைகளும்  கொண்டவைகளாக இருக்கின்றன.  பெண் இனங்கள், சாதாரணமான  அம்சங்களுடன் இருக்கும்.  கவர்ச்சிகரமான ஆண்களுக்கே பெண்களிடம் வரவேற்பு.  ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் உள்ள வித்தியாசம்?

அதாகப்பட்டது லோகத்தில,
தன் ஆறாவது அறிவின் மூலம், கவர்ச்சியை பெண் இனத்துக்கு மாற்றிவிட்ட ஆண் இனத்தின் திறமையின்  கொண்டாட்டமே - இந்த ஆண்கள் தினம். ஆண்கள் தின நல்  வாழ்த்துக்கள்!
(புகைப்படங்கள் உபயம் - கூகிள் ஆண்டவருக்கு படங்களை, படையல் செய்த சில  கூகிள் பக்தகோடிகள்)

Thursday, March 18, 2010

தவிச்ச வாய்க்கு தண்ணீர்..... save the water!

" பணத்தை தண்ணீரா செலவழிச்சு, அவள் பிறந்த நாளை கொண்டாடினாங்க....."
"அவ்வளவு சிக்கனமாகவா கொண்டாடினாங்க?"
"நீ வேற.....!  ஹிந்து பேப்பர் பார்க்கலியா?"

((photo: Thanks to Outlook India)http://www.dnaindia.com/img/1359680.jpg


ஹிந்து பேப்பர் மட்டும் இல்லை. இப்போ, BBC நியூஸ் வரைக்கும் பார்த்துட்டேன்.   :-(

பக்கத்து மாநிலம் தானே எக்கேடோ போகட்டும் என்று விட முடியுமா?
"தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடியவர் வந்த மாநிலத்து ஆளாச்சே. பாத்துட்டு நெஞ்சு பொறுக்குதில்லை, இந்த நிலை, குலை கெட்ட மனுஷியை கண்டால்......
 2010 - மகளிர் தினத்தை ஒட்டி - மகளிர்க்கு திருஷ்டி பூசணிக்காயாய் இவளை பற்றிய செய்தி.
தண்ணீரை வீணாக்காதீங்கனு விழிப்புணர்வை கொண்டு வர, உலகமே அலறுகிற நேரத்துல, பணத்தை வீணாக்கி ஒரு பிறந்த நாள் திருவிழா.

அடுத்த வருகிற வம்சங்களுடைய தவிக்கிற வாய்களுக்கு தண்ணி இருக்கட்டும் என்று சொன்னா,  இங்கே ஒருத்தி, இப்போவே அவளுடைய மாநில மக்களின் வாயி வயிறு எல்லாம் காய போட்டுட்டு, இப்படி கூத்தடிச்சா?????

வரலாறை திருப்பி பார்த்தால், மாயாவதியின் மாய லீலைகள் 2003 வருடமே பரபரப்பை ஏற்படுத்தி இருக்குங்க.  51 கிலோ கேக் வெட்டி, 100,000 லட்டுக்கள்,   60 quintals  காணக்கில் சிறப்பு மலர்கள்  கொண்டு கொண்டாட்டம் களை கட்டி இருக்கு.  இரண்டு பொருட்காட்சி விழாக்களும் நடந்துருக்கு.  எல்லோரும் அப்போதே சாதாரணமா எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க.  இப்போ விரலுக்கு ஏத்த வீக்கமா, " அப்போவே நான் தில்லாலங்கடி. இப்ப நான் ஜகஜால கில்லாடி. சும்மா விடுவேனா?" என்று வூடு கட்டி அடிச்சு ஒரு விழா கொண்டாடியிருக்காங்க.

முன்னாள் ஆசிரியை முதல் மந்திரியா வந்தா, நாம் எல்லா விஷயத்திலேயும் முந்திக்கலாம் என்று ஆசை மயக்கத்தில் இருந்த உத்தர் பிரதேச மக்கள், முகத்தில் அடிச்சு எழுப்ப தண்ணீரை வீணாக்காமல் சேர்த்து வைக்க வேண்டும்.  இதை அவர்களுக்கு  மட்டும் வந்த சோதனையா நினைச்சு சும்மா இருக்கமுடியாது. தனக்கு, பிரதம மந்திரி பொறுப்பு மேல ஒரு ஆசை என்று சொல்லி இருக்காங்க.  அப்படி ஆயிட்டாங்கனு வைங்க, இந்தியாவுக்கே மஞ்சாத் தண்ணி தெளிக்க வேண்டும். தண்ணீரை இப்போவே சேமிச்சு வைங்க.

இந்த மாதிரி தலைவர்கள் ஆட்சியில், மக்கள் கண்களே வற்றாத ஜீவநதிகளாய் இருக்கும். 
தேசிய நதிகள் எல்லாம், தேசிய, மாநில தலைவர்கள் வீடுகளுக்கு மட்டும் கால்வாய் வெட்டி திருப்பிவிடப் பட்டிருக்கும்.

மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் நல வாழ்வு திட்டங்களுக்கு, நஷ்ட ஈட்டு தொகைக்கு எல்லாம் கஜானா காலி என்ற கையை விரிச்ச மகராசி,  தன்னை விட உயரமான அளவில் ஒரு லஞ்ச பண மாலையை பெருந்தன்மையா வாங்கி கொண்டு, தன் எடைக்கு மேல எடை அளவு கொண்ட கேக் வெட்டி , ரொம்ப "க(இ)ஷ்டமான" மன  நிலையோட பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க. எல்லோரும் அதை பார்த்துட்டு, நமக்கு என்ன என்று இந்த விஷயத்துல கை கழுவிட்டு போகணும்னா கூட,  தண்ணி வேணும். ஒரு பில்லியன் மக்களுக்கு மேல கை கழுவனும்னா எவ்வளவு தண்ணி வேண்டும். தண்ணியை வீணாக்காமல் சேமிச்சு வைங்க.

நம்ம வெட்டி பேச்சு மாதிரி, மக்களே சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுறாதீங்க.
பணத்தையும் அந்த கால தண்ணீர் மாதிரி வீணாக்காமல், இந்த கால தண்ணீர் மாதிரி சிக்கனமாக செலவழிச்சு -  நம் நலன் மட்டும் கருதாமல், நமது சந்ததி நலன் கருதியும் ஆக்க வேலைகள் செய்தால் நம்ம நாடு உருப்படும் என்று நம்புவோம்.

  எல்லா  மாநிலத்து முதலை மந்திரிகள் கவனிக்கவும் - நீங்க பல சந்ததிகளுக்கு சேத்து வச்சுட்டீங்க. மத்தவங்க வாழ உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாதீங்க, ப்ளீஸ்.  நீங்கள்  மக்கள் தலையில் தண்ணி தெளிச்சு, உங்கள் நலனுக்கும் எங்கள் நலனுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியது போதும்.

Conserve the water - Save the water - Save the people of India!!!

Monday, March 15, 2010

ஸ்பெஷல் டெலிவரி

((Thanks: Image from Funnyhub.com))
குழந்தைகளுக்கு, இப்படியும் ஒரு pacifier - சூப்பி ....... !!!   நம்மை விட வெட்டியா நிறைய பேர் யோசிப்பாங்க போல.

இந்த வாரம், என் மகள், செல்லத்தின்  பிறந்த நாள் வருகிறது.
சென்ற ஆண்டு கொண்டாட்டத்தின் போது,  அழகான கேக்கை  நேர்த்தியாக வெட்டினாள்.
வெட்டியபின், ஆர்வமாக தனது முதல் பிறந்த நாள் கேக்கை , அவள் சார்பில் யார் வெட்டினார்கள் என்று கேட்டாள்.  "அம்மாவா? அப்பாவா?"
எனது பதில்:  "Dr.Lampkin"
மகள் செல்லம்: "டாக்டர்?"

ம்ம்ம்மம்மம்ம்ம்ம்............. மாவு கிரைண்டர் சுத்தி  - (நான் கொசுவத்தி சுத்துரதை விட்டு நாள் ஆச்சு)  - ஒரு mini-flashback.

மார்ச் 17 இரவுக்குள், பிரசவ வலி வந்து டெலிவரி ஆகவில்லை என்றால், 18 ந் தேதி காலை மருத்துவமனையில் (Texas) வந்து அட்மிட் ஆகி கொள்ளும் படி, டாக்டர் எழுதா ஒப்பந்தம் போட்டு இருந்தார். அதன் படி, பிரசவ வலியோ பரபரப்போ இல்லாமலே  போய் அட்மிட் ஆகி இருந்தேன். 

ஊரில் இருந்து என் அம்மாவோ அத்தையோ உதவிக்கு வர முடியவில்லை..  என் கணவரும் நானும் சமாளித்து கொள்ளலாம் என்று கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் இருந்து விட்டோம்.

காலையில் வந்து சோதித்து பார்த்த டாக்டர்,  C-section (cesarean) surgery தான் திட்டவட்டமாக சொல்லி,  "இப்போ நான் மற்ற patients கவனிக்க போக வேண்டும். 12 மணிக்கு என்னுடைய மதிய உணவு நேரம். சீக்கிரமா சாப்பிட்டு விட்டு வந்து லஞ்ச் டைம்ல சர்ஜரி செய்ய வருகிறேன்" என்று ஏதோ மதிய சாப்பாட்டுக்கு அப்புறம்  பாயாசம்/ரசம் குடிக்கிற  மாதிரி சொல்லி விட்டு போனார்.   சர்ஜரி - எனக்கு சர்ஜரி -  அவருக்கு லஞ்ச் டைம்  - கிர்ர்ரர்ர்ர்.........

நர்ஸ் நிறைய Formality Forms எல்லாம் ஒரு File இல் வைத்து, என் கையெழுத்துக்காகவும் என் கணவரின் கையெழுத்துக்காகவும் வந்தாள். ஒரு பார்ம் எடுத்து படிக்கலாம் என்று பார்த்தால், "இந்த மேஜர் சர்ஜரிக்காக கொடுக்கப்படும் Spinal anesthesia பற்றியும் அதற்கு உள்ள disclaimer பற்றியும் இருந்தது.
"உங்கள் முதுகு தண்டு வடம் அருகே கொடுக்கப்படும் இந்த மருந்தால், உங்கள் கால்கள் இரண்டும் செயல் இழந்து போனால், கம்பெனி பொறுப்பு எடுக்காது. இல்லை, நீயே செயல் இழந்து ஒரேயடியா போயிட்டே என்றாலும் கம்பெனி பொறுப்பு எடுக்காது" என்ற ரீதியில் பல மிரட்டல் தகவல்கள். சர்ஜரிக்கு போகும் முன்னால், இது ரொம்ப அவசியமா   என்று நொந்து கொண்டேன்.

கண்ணை மூடி, ஒரு நிமிடம் கடவுளை நினைத்து கொண்டு மார்க் செய்யப் பட்டிருந்த எல்லா இடங்களிலும் கையெழுத்து போட ஆரம்பித்தேன்.
நர்ஸ் கரிசனையுடன்,   "படித்து பார்த்து விட்டு கையெழுத்து போடணும்" என்றாள்.
"படிச்சு பார்க்கலாம் தான். அதை படிச்சிட்டு புரிஞ்சது புரியாததை பத்தி கவலைப் பட வேண்டாமே என்று பார்த்தேன்.
படித்து விட்டு, நான் கையெழுத்து போட மாட்டேன் என்று சொன்னால், இதில் எழுதி இருப்பதை மாற்றி எழுத போகிறீர்களா? இல்லை கையெழுத்து போடவில்லை என்றாலும் சர்ஜரி செய்ய போகிறீர்களா?" என்று கேட்ட என்னைப் பார்த்து பரிதாப சிரிப்பு சிரித்தாள்.
"ஒரு பேப்பர் மட்டும்  மிஸ்ஸிங்"
"என்ன பேப்பர்" என்று நர்ஸ்  கேட்டாள்.
"அப்படி ஒரு நிலைமை  எனக்கு நேர்ந்தால் -  என் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் -  கம்பெனி பொறுப்பு ஆகாது என்றும் எழுதி வைத்து இருக்கலாம்."
என் கணவர், "இந்த நேரத்திலும் உனக்கு இப்படி எல்லாம் தோணுது பாரு" என்றார். என் கவலை எனக்கு.

ஒரு வழியாக டாக்டருக்கு  லஞ்ச் டைம் வந்தது - அப்படியே எனக்கு  சர்ஜரி டைம் வந்தது.  என் கணவர் முகத்தில் மகளை பார்க்க போகிற சந்தோஷம். எந்த கவலை ரேகையும் அவர் முகத்தில் தெரியவில்லை.
Dr.Lampkin என்ன சாப்பிட்டார் என்று தெரியவில்லை. பயங்கர சந்தோஷத்தில் இருந்தார். அவரை விட இரட்டிப்பு சந்தோஷத்தில், எனக்கு anesthesia கொடுத்த டாக்டர் இருந்தார்.  உதவிக்கு இருந்த இரண்டு நர்ஸ்களும் ஒரே  கலகல.  எல்லோரும்,  முந்திய தினம் பார்த்த  கவ்பாய் (cowboy) டிவி ஷோ பற்றி பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள்.  என் கருத்தையும் கேட்க மறக்கவில்லை.  ஏதோ "coffee time with Anu"  நிகழ்ச்சி மத்தியில் இருப்பது போல உணர்வு. ஆபரேஷன் தியேட்டர் போல இருக்கவில்லை.
எனக்காக என்னை தவிர வேற யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.

டாக்டர், சர்ஜரி மேஜையில் கலக்கத்துடன் படுத்து இருந்த  என் அருகில் கூர்மையான கத்தியுடன் வந்ததும்,
" சித்ரா ரெடியா? இன்று உன் மகள் பிறக்கும் நாள்.  நீதான் பர்த்டே கேக். கட் பண்ண போறேன். பர்த்டே சாங் பாடலாமா?" என்றார். எல்லோரும் சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்டது - அதில் என் சிரிப்பும் இருந்தது.
ஒரு நிமிடம் கண்களை மூடினேன். எவ்வளவு கவலை பட்டு டென்ஷன் ஆக பரபரப்பாக இருக்க வேண்டிய நேரத்தை, டாக்டர் எப்படி மாற்றி விட்டார்!  எல்லாம் நல்ல படியாக நடந்தது.  எனக்கும் யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு போய் இருந்தது.

ஒவ்வொரு வருடமும் என் மகளின் பிறந்த நாள் கேக் பார்க்கும் போது Dr.Lampkin  கமென்ட் நினைவுக்கு வந்து சிரிப்பேன்.  என் மகன், செல்வம்  பிறந்த வேளையிலும்  - மீண்டும் யாரும் உதவிக்கு வர இயலாது இருந்த போதும்  - டென்ஷன் ஆகாமல், என் மகன் பிறக்கும் நாள் பார்ட்டிக்கு - நானே மீண்டும் பர்த்டே கேக் ஆக -  மருத்துவமனைக்கு உற்சாகமாக சென்றேன்.  சர்ஜரி நல்ல படியாக நடந்தது, கடவுள் அருள்.

 எந்த பிரச்சினையையும் பதட்டம் இல்லாமல் அணுகவும், அதில் இருக்கும் தனித்தன்மையை கண்டு ரசிக்க சிரிக்க பழகி கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.  (உடல், மன) வலியும் வேதனையும் அந்த அந்த நிமிடங்களுக்கு உரியவை.  வலிக்குமே என்று கவலைப்படுவதும், வலித்ததே என்று புலம்புவதும் கவலைகளின் இருப்பிடம்.    டென்ஷன் இருட்டில், எல்லாமே அரண்டு மிரண்டு பயங்கரமாக தெரிகிறது.    நகைச்சுவை ஒளியில் பார்த்தால் வெளிச்சமாக, பாசிடிவ் ஆக தெரிகிறது.


HAPPY BIRTHDAY, CHELLAM!
இந்த ஐம்பதாவது  பதிவு உனக்கு ........  செல்லம்!

Wednesday, March 10, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள் (தொடர் பதிவு)

 எனக்கு பிடித்த பத்து பெண்கள் தொடர் பதிவுக்கு அழைத்த திவ்யா ஹரிக்கு நன்றி.
http://everythingforhari.blogspot.com/2010/03/10.html 

தொடர்  பதிவின் விதி (விதியை நொந்துக்கிறேன்):


1    உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.  
(அப்புறம் பத்து பேரை தவிர லிஸ்டில் இல்லாத மத்தவங்க எல்லாம் குழாய் அடி சண்டை போடுவாங்க. அந்த நேரம், அந்த பத்து பேரும் ஒத்தாசைக்கு வருவாங்கன்னு சொல்ல முடியாது.)

2. வரிசை முக்கியம் இல்லை
(ஆமாம்,  பிடித்த பத்து பேருக்கும் பல் வரிசை, சீர் வரிசை எல்லாம் முக்கியம் இல்லை)
 
3.  ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்.   இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள் இருக்க வேண்டும்.
(துறை என்று சொன்னாங்க, எந்த துறைனு சொல்லலியே...........  பத்து துறையை கண்டு பிடிச்சு, அதில் பத்து பெண்களை கண்டு பிடிச்சு, அவர்களை நமக்கு பிடித்தவர்களா என்று கண்டு பிடிச்சு,  ...............
இப்போ பிடிச்சு, அப்புறம் பிடிக்கலைனா?       ............. இப்போ பிடிக்காமா, அப்புறம் பிடிச்சுதுனா? ........)


இனி ஒரு விதி செய்வோம்.  தொடர் பதிவு என்று இருப்பதை,  நண்டுபிடி பதிவு என்று மாற்ற சொல்லி பதிவர் மாநாட்டில் மனு கொடுக்கலாமா?
ஒரு நண்டை பிடிச்சா, ஒரு ரெண்டு நண்டாவது அது காலை பிடிச்சிக்கிட்டு வரும்.

எனது பதிவுல முன்னோர்கள் எழுதிய இந்த தலைப்பின் நண்டு பதிவை படித்தால் - அறிவியல், ஆன்மிகம், அரசியல், ஆங்கிலம் போன்ற எல்லா துறைகளிலும் வெற்றி பெற்ற பெண்கள் பெயர்களை ஏற்கனவே போட்டு விட்டாங்க.

பிடித்த பெண்கள் லிஸ்ட்:

1.  போக்குவரத்து  துறை:    செசிலியா  -
காலேஜ் போகும் போது,  சில சமயங்கள் பஸ் இல் கூட்ட நேரத்தில்,  என் bag "பிடிக்காமல்" இருந்திருந்தால் நான் foot board ல அம்பேல் ஆகி இருந்து இருப்பேன்.

2.  சமையல்  துறை :   தன் அடுக்களையில் சப்பாத்தி மாவு மட்டும் அல்ல -  எனக்கு, முதல் பதிவுலக விருது கொடுத்து, என் மனதையும் பிசைந்து விட்ட ஜலீலா அக்கா.
என் அவியல் பதிவுகள் அவர்களுக்கு "பிடித்து" இருந்துச்சாம்.

3.  ஊர் சுற்றுலா துறை:  லிண்டா
அமெரிக்கா வந்த புதிதில், பப்பரபான்னு ஒண்ணும் தெரியாமல் முழிச்சிக்கிட்டு இருந்தபோது,  தன்னுடன் ஊர் சுற்ற அழைத்து போனது எனக்கு பிடித்து இருந்தது.

4.  மருத்துவ  துறை:  ராஜம்
இவங்க யார்னே எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு ஒவ்வொரு முறை சளி "பிடிக்கும்" போதும்  - ராஜம் சுக்கு காப்பி பவுடர் பாக்கெட் வழியா வந்து ரொம்ப உதவி செய்றாங்க.  நெல்லை போகும் போதெல்லாம்,  வாங்கி வந்து ஸ்டாக் பண்ணி இருக்கேனாக்கும்.

5.  சினிமா துறை:  ஊர்வசி.
என்னவோ தெரியலை. இவங்க காமெடி எனக்கு பிடிக்கும். பேசும் விதமும் பிடிக்கும்.

6.  அரட்டை துறை:  அலமேலு என்ற அம்மு
அம்முவும் நானும் அரட்டை அடிக்க ஆரம்பித்தால், உலக பிரச்சினைகள் எல்லாம் அலசி ஆராய்ந்து, பிழிந்து எடுத்து முடிவு கண்டு "பிடித்து" விடும் வரை ஓய்வதில்லை.

7.  அரசியல் துறை:  "தூள்"  சொர்ணா அக்கா
பெண்களாய் இருந்தாலும், அரசியல் எப்படி செய்யணும் என்பதை அப்படியே  படம் "பிடித்து" காட்டி இருந்தாங்க.

8.  விளம்பர துறை:   ஹமாம் அம்மா
அந்த அம்மா குடும்பத்துல மட்டும் இருக்கிற ஒரே கவலை/பிரச்சினை - ஹமாம் சோப்பு  வீட்டில் எல்லோரும் உபயோகிக்கிறாங்களா இல்லையா என்பது தான்.  குடும்ப பிரச்சினைகள் எல்லாம் தீர ஹமாம் சோப்பு போட்டு குளிக்கணும் என்று அந்த அம்மா, கண்டு "பிடித்து" இருக்காங்க.

9.  கற்பனை துறை:   பவித்ரா.
ideal girl  - பவித்ரமான அழகு, பவித்ரமான பணிவு, பவித்ரமான மென்மை, பவித்ரமான புன்னகை.
இந்த பெண்ணை, தன் மனதில்  "பிடித்து" வைத்து, கற்பனை குதிரை தட்டி விட்டு சில பேர் (பெரும்பாலும் ஆண்கள்) எழுதும் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.  (கவனிக்க: அவர்கள் எழுதும் கவிதை கிறுக்கல்கள்  மட்டும் எனக்கு பிடிக்கும். அவர்களின் கிறுக்குத்தனம்  பிடிக்காது)

10.  விண்வெளி துறை:   விண்வெளிக்கு சென்ற - செல்ல போகிற எல்லா பெண்களும் - ஒன்றா இரண்டா - விளக்கம் சொல்ல தேவை இல்லை.

Monday, March 8, 2010

ice skating

ice skating  -  ஆசை யாரை விட்டது?
ice-skating மற்றும் me-skating. 
வழுக்கி விழலாம் வாங்க ............

கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்:

நமக்கு  icy ரோடுல நடந்து போனாலே, வழுக்கும். இதுல, காலில் கத்தி பொருத்தப் பட்ட ஷூஸ் போட்டு வழுக்கு என்று   அனுப்பிவிட்டா, ஒரே சொய்ங் தான்.  Ice rink arena ல நம்மை உள்ளே அனுப்பிட்டு, நாம வழுக்கி போய் கீழே விழுறதை பாத்து ரசிச்சு சிரிக்க ஒரு நண்பர் கூட்டம், அந்த வளைவை சுத்தி நிக்குது. நம்மை வச்சு காமெடி ஷோ நடத்த, நாமே  கூட்டம் சேர்க்கிற கொடுமைனு நினைச்சிக்கிட்டேன்.  ஆனால், முதல் இரண்டு மூன்று தடவைதான் சிரிப்பு சத்தம் எல்லாம். அப்புறம், ஒரே அறிவுரை மழைதான்.  ice rink ல முன்ன பின்ன இறங்காத நண்பர் -   கோக் குடிக்கும் போது கூட,  ஐஸ் கட்டிகள்  போட்டு குடிக்காதவர் - அவர் கூட மாறி மாறி கொடுத்த டிப்ஸ்....... அடேங்கப்பா..........  சும்மா சொல்லக் கூடாது - பாசக்கார பய புள்ளைக!
  ஆறுதலான  விஷயம் என்ன என்று  கேட்டால்:  வழுக்கி விழுந்த  பொண்ணுனு,   என் கணவர்   கை விடாம,  நான்  கீழே விழும் போதெல்லாம், தூக்கி விட்ட கை கை கொடுத்த தெய்வம் அவர்.  மனுஷன் சளைக்காமல் - முக்கியமா சிரிக்காம - உதவி செய்தார் பாருங்க.  அட, அட, அட.........
 
ஆடத் தெரியாதவள், மேடையை குறை சொன்னது போல......

உள்ளே நுழையும் முன், எனக்கு மூளை சலவை செய்தவர்கள் பகிர்ந்த கூற்று:
" அங்கே பாருங்க. எவ்வளவு சின்ன பிள்ளைகள் எல்லாம் தைரியமா போகுது. நீங்க, சும்மாவே தைரியமான ஆளு. (எப்படா, நான் அப்படி சொன்னேன்? இன்னுமா உலகம் என்னை நம்புது? உசுப்பேத்தி விடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?)  கொஞ்சம் நேரம் அப்படியே, அந்த கைப்பிடி பிடிச்சிக்கிட்டு பழகிட்டு, அது பக்கத்திலேயே கை விட்டுட்டு போங்க. விழுகிற மாதிரி இருக்கும் போது, எட்டி அந்த கம்பியை பிடிச்சிக்கோங்க. அவ்வளவுதான். பயம் இல்ல."
கேக்கும் போது நல்லாத்தான் இருந்தது. அங்கே போனா................. நல்லாவே இல்லை.

வழுக்கு தரையில், வழுக்கும்னு தெரிந்தே வழுக்குவதற்கு  என்றே, மூளை மழுங்கி,  வழுக்க வந்தவளுக்கு இந்த வழுக்கலும் வேணும், இன்னமும் வழுக்கி விழ  வேணும்............ அவ்வ்வ்வ்வ்.........

முதல் கோணல் - சாரி, விழல் - முற்றிலும் விழல்:

வலது காலை வச்சு உள்ளே நுழைந்த உடனேயே .......... ணங் என்று ஒரு அடி - ஒரு  அதிர்வு - ஒண்ணும் புரியவில்லை. ice rink ல குப்புற விழவில்லை - மல்லாக்க விழுந்து கிடந்தேன். எழும்ப முயற்சி செய்தால், இல்லாத ஊருக்கு வழி கேட்ட மாதிரி, காத்தை பிடிச்சு - கை அந்தரத்துல fiddle வாசிக்குது. அட பாவிகளா! நிற்கும் போது பக்கத்தில  இருந்த கைப்பிடி கம்பி, இப்போ எட்டாக் கனி போல உயரத்தில் தெரிந்தது.
 
நம்ம ஆளு உதவியால எழும்பி நின்ற அடுத்த நிமிடமே, ணங்.......................!!! விடாக் கொண்டன் - கொடாக் கொண்டன்  பாணியில், பல முறை "எழு முன் -  விழு பின்"  கதை தொடர்ந்தது. எழுந்தது விழத்தானோ, விழுந்தது எழத்தானோனு  இலக்கிய கேள்வி எல்லாம்,  அடி வாங்கிய தலைக்குள் எழுந்தது - இல்லை விழுந்தது.

களவும் கற்று மற:

நான் நின்று கொண்டிருந்த நேரத்தை விட,  ஐஸ் தரையோடு தரையாய் உருண்டு கொண்டிருந்த நேரம் தான் அதிகம். அந்த angle ல இருந்து பாத்தப்போதான், மேல உள்ள டிஸ்கோ பிளாஷ் லைட்ஸ், பலூன்ஸ், பளிச் பளிச் strobe லைட்ஸ் அழகு எல்லாம் இன்னும்  நல்லா தெரிந்தது. எங்கே எங்கே எல்லாம் லைட்ஸ் வைத்து இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய முடிந்தது.   ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், கீழே விழுந்து அடி வாங்கினேன். பட்ட இடத்திலேயே அடி பட்டேன். அடி வாங்கிய இடங்களில்,    வலி போக ஒரு வாரம் ஆச்சு. ஆனாலும், மனதுக்குள் இன்னும் ஒரு சந்தோஷம். மக்களே, நானும் ice skating பண்ணி (????!!!)  இருக்கேன்.


என்ன இருந்தாலும், இதுக்கெல்லாம் அசந்து விடும் ஜென்மமா நான்?   விழுந்து விடுவோமோ என்ற பயமும் - விழுந்து விட்டால் எல்லோரும் சிரிப்பார்களே என்ற வெட்கமும் - கீழே விழுந்தால் வலிக்குமே என்ற தயக்கமும் இத்தனை நாட்கள், நான் முயற்சி செய்ய தடையாய் இருந்தன.  விழுந்தாச்சு, எல்லோரும் சிரிச்சாச்சு, வலி என்னனு தெரிஞ்சாச்சு.  தடைகள் உடைஞ்சு போயே போச்சு.   இனி என்ன?   நிச்சயம், திரும்பவும் வாய்ப்பு கிடைக்கும் போது  போவேன்.  அடுத்த முறையாவது, விழாமல் நிற்க கற்று கொள்ள வேண்டும். அப்புறம் skating எப்படி செய்ய வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்.

இப்படித்தான், பல விஷயங்களில் நாம் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம்.  முதல்  அடி எடுத்து வச்சுட்டா - அப்புறம், ஒரே சொய்ங்................!!!

இதுதானே என் "white" ..........

சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல்... சக்தி 2010 - என் முதல் கட்டுரையாக  இந்த பதிவு   வெளியாகியது.
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!  
யூத்புல் விகடன் 


" நான்கே வாரங்களில் ............. மென்மையான  - மாசு மருவற்ற - நாசுக்கான  - சிகப்பழகு........ தரும் கிரீம்"
விளம்பரத்தில், ஏற்கனவே சிகப்பாய் இருக்கிறவங்க அந்த கிரீம் போட்டு, மேலும் சிகப்பழகை பெற்று கொள்கிறார்கள். கோதுமை மாவு முகம், கிரீம் போட்டு மைதா மாவு முகமாய் மாறுகிறது. 

வெட்டி பேச்சின் சந்தேகங்கள் - எண்ணங்கள் :

1.  முகத்துக்கு  மட்டும்  போட்டு கொள்கிற facial cream - முக அழகு கிரீம் - என்று சொல்றாங்களே ......
முகம் மட்டும் வெள்ளையா இருந்து,  கை கால், உடல் எல்லாம் வேற நிறத்துல இருந்தா பார்க்க எப்படிங்க இருக்கும்?
அழகாகவா இருக்கும்? பாண்டா கரடி மாதிரி இருக்காது?

2.  தன் நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை எல்லாம் முகங்கள் (மட்டும்) வெள்ளையாய் சிகப்பாய் இருக்கிறவங்களுக்கு  மட்டும் தான் வருமா?  சிகப்பழகுடன்  தன் நம்பிக்கை ஊட்டும் கிரீம் ............ ஓ!

3. சிகப்பு மட்டும் தான் அழகா?  இதை official ஆ எப்பொழுது  அறிவித்தார்கள், எங்கு அறிவித்தார்கள், எப்படி அறிவித்தார்கள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா.

4.  சிறிய வயதில்,  african, mongolian, caucasian என்று பல races - இனங்கள் இருப்பதாக பள்ளியில் சொல்லி கொடுத்தார்கள். இப்படி எல்லோரும் கிரீம் உபயோகிக்க ஆரம்பித்தால், எல்லோருமே caucasian race போல வெள்ளையாய் மாறி விட்டு, மற்ற இனங்கள் அழிந்து விடுமே........

5. நல்ல வேளை - 1947 க்கு முன்னாலே, நிறைய பெண்கள் இந்த சிகப்பழகு கிரீம்  வாங்கி உபயோகிக்கவில்லை. அப்புறம், "வெள்ளையனே வெளியேறு!" என்று  அடையாளம் தெரியாமல், குழப்பம் ஏற்பட்டு, நம் இந்திய பெண்மணிகளையும்  சேர்த்து நாட்டை விட்டு அனுப்பி இருப்பாங்க.

கண்மணிகளே,  எல்லோருமே மாடல் அழகிகள் மாதிரி இருந்தால்தான் வெற்றி என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.  சிகப்பழகு தரும் தன் நம்பிக்கை  கப்பலில் பயணம் செய்யும் போது, வெயிலில் போய் விட்டு சிறிது கறுத்தாலும் உடனே, அந்த  கப்பல் மூழ்கி கவலையில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து புலம்ப வேண்டியதுதான்.
சுத்தமாய், நேர்த்தியாய் திருத்தமுடன் இருப்பது அழகு. நிறம் மட்டுமே அழகை தந்து விடாது. 

கண்ணாடியில் பார்க்கும் போது, முகம் சுளிக்காதீர்கள். நிலாவில் கூட குறை உண்டு. அதை பெரிது படுத்தி நாம் ஒதுக்குவது இல்லையே.  முழு நிலவின் ஒளியில், குறைகள் மறைந்து போகும்.  சாதிக்க வேண்டிய சக்தியின் ஒளியில், உங்கள் குறைகளை ஒதுக்கி வைத்து பாருங்கள்.

ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற ஒவ்வொரு அம்சம் தேவை.
சிகப்பழகு, வெற்றி கட்டடத்துக்கு அஸ்திவாரம் இல்லை. உறுதியான கட்டடத்தின்  பல வர்ணங்களில் ஒன்று  மட்டுமே.
 நம் திறமைகளிலும் வாய்ப்புகளை சரியாக உருவாக்கி பயன் படுத்தி கொள்வதிலும்,  இறை அருளிலும்  நம்பிக்கையுடன் உற்சாகமாய் இருப்பதிலும் , பலமான அஸ்திவாரம் அமைய வேண்டும். தோல்விகளை கண்டு மிரளாமல், சோர்ந்து போகாமல் முன்னேறி வர வேண்டும்.
 
பொறாமை என்ற மாசு நீக்கி -  பயம், கவலை, தயக்கம் என்ற மருக்களை அகற்றி - புன்னகை என்ற மென்மை தவழ - உங்களுக்கென்று தனித்துவமாய் இருக்கும் திறமைகளை ஆர்வமாய் வளர்த்து கொண்டு  - அழகாய் வெற்றி பெற வாருங்கள்.

"குறை ஒன்றும் இல்லை ........கண்ணே......."

Thursday, March 4, 2010

என்ன போட்டி வச்சுக்கலாம்?

 இது ஒரு சினிமா விமர்சனம். முதல் முறையாக நானும் விமர்சனம் எழுதுறேன்.

சன் டிவி promote செய்த படங்களிலேயே, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மக்கள் பார்த்த படம் -
"கதவை திற - எல்லோரும் பார்க்கட்டும்"

இதில்,  தன் புளப்பை சாமியார் வேலையில் பார்த்தவரை ஹீரோவாக முதலில் எல்லோரும் கருதி, இறுதியில் அவர் தான் வில்லன் என்பது கிளைமாக்ஸ் காட்சியில் தெரிய வர, நல்ல ட்விஸ்ட்.  சாரி, சஸ்பென்சை சொல்லி தொலைச்சிட்டேன். இந்த முடிவு தெரியாமல்தான், நிறைய பேர் - படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், இந்தியாவில் வாழும் இந்தியர்கள், வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் எல்லோரும் கத்தை கத்தையாய் பணத்தை கொடுத்து புண்ணியம் தேடிக்கிறேன் என்று சொல்லி,  அவர் பாவத்தில் பங்கு வாங்கிக்கிட்டார்களாம்.  ஆன்மிகத்தை வைத்து கல்லா பெட்டி நிரப்பி கொண்டிருந்தவரே இப்போ மற்றவர்கள் கல்லா நிரப்புவதற்கு காரணம் ஆகி விட்டார் என்ற ஒரு வரி கதையை,  கிளுகிளுப்பூட்டும் காட்சி நிறைந்த ஒரு பிட் படத்தில் காட்டி அசத்தி இருப்பது டைரக்டர் திறமையா,  இல்லை சன் டிவி திறமையா என்று தெரியவில்லை.  யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை. அதான் கேட்கிறேன்.

கேமரா மேன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.  ஆங்கே ஆங்கே காட்சி தெளிவு இல்லாமல், ஆன்மிகத்தில் அமைதி தேடி, அந்த தலைவரிடம் ஏமாந்து போனவர்களின் புத்தி மாதிரியே இருந்தது.

படத்தை வேறு டிவியில் போட்டு விடுவார்களோ என்ற பயத்தில் சுட சுட தந்ததால், சென்சார் - ரேட்டிங் - எதை பற்றியும் கவலை படாமல் எல்லோரும் பார்க்கலாம் என்ற நியதியில்  வெளியாகி இருக்கிறது.

இத்தனை நாள் அடித்த கூத்து, ஏன் திடீர் என்று அம்பலத்தில் வந்தது என்ற அசிங்கமான பின்னணி காரணங்கள் - யார் யார் எந்த சொத்து பத்து படுக்கை பிரச்சினையில்  எதிரிகளாய் மாறினார்கள் என்று அடுத்த பாகத்தில் வெளியிடுவதாக தகவல் சொல்லி வருகிறார்கள். இல்லை, மக்கள் மேலும் ஏமாறக் கூடாது என்ற நல் எண்ணத்தில் ஒரு புண்ணியவான் படம் எடுத்து விட்டான் என்றும் சர்ச்சை எழுந்து உள்ளது.

சும்மா டிவி சீரியலில் பார்த்ததையே பார்த்து போர் அடித்து போய் இருந்த தாய் குலங்களுக்கும் -   நாட்டு நடப்பை பத்தி பேசுனா ஆட்டோ வருது , ஆனால் இதை பத்தி பேசுனா நல்லா இருக்கு என்ற எல்லா குலங்களுக்கும் - காவியே அது பொய்யடா, அது ஏமாற்றும் ஒரு பையடா என்று சொல்லும் நாத்திக குலங்களுக்கும் - இந்த கசமுசா பேச்சுக்கள் நல்லா அவலாக அமைந்து உள்ளது. எனக்கும் ஒரு பதிவு கணக்காச்சு.

மொத்தத்தில் இந்த படம் - இரண்டு வாரங்களுக்கு எல்லோருக்கும், நல்ல பொழுது(தை)போக்கும் அம்சம் உள்ள படம். 

சரி, போட்டிக்கு  வருவோம் -
இந்த படம் மறக்க எத்தனை நாட்கள் ஆகும்?
  -  (அ) ஒரு மாதம்   (ஆ)  ஒரு மூன்று மாதம்

இந்த படம் தந்த பாடம், எத்தனை பேருக்கு புரிந்து இருக்கும்? 
- (அ) ஒரு ஐந்து பேர்  (ஆ) ஒரு பத்து பேர்

இதே போல உள்ள அடுத்த நியூஸ், இன்னும் எத்தனை நாட்களில் வரும்?
 - (அ) - வருடத்துக்கு ஒன்று என்றால் சுவாரசியம் இருக்கும்.
  (ஆ)  - இன்னும் இரண்டு வருடமாவது வேண்டாமா? - முதல் வருடம், ஒருவனை தலையில் தூக்கி வச்சு கொண்டாடணும். மறு வருடம், அவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றணும்.

அந்த நேரத்தில் பலிகடா ஆகப் போகும் நடிகை யார்?
 - (அ)   பத்து வருடம் முன் பிரபலமாக  இருந்த ஒரு நடிகை.
 (ஆ)      வளரத் துடிக்கும்  - ரெண்டு படத்தில் தலை காட்டின நடிகை.

விடைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். தினமும் சன் நியூஸ் பாருங்கள். செய்தியையும் உங்கள் விடைகளும் சரியாக இருந்தால், சன் நியூஸ் இலவசமாக அந்த exclusive video அனுப்பி வைப்பார்கள்.